தமிழ்நாடு
“நேருக்கு நேர் வா பாக்கலாம்..!”- துரைமுருகனுக்கு ஜெயக்குமார் சவால்


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மீதான இரண்டாம் கட்ட ஊழல் புகார்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் இன்று சமர்பிக்கிறார் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன். இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் திமுகவையும், துரைமுருகனையும் விமர்சித்துப் பேசியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகைக்குப் படை எடுத்தது திமுக தரப்பு. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதை விசாரிக்கச் சொல்லி உத்தரவிடுமாறு ஆளுநரை சந்தித்து வலியுறுத்தி உள்ளோம் என்று ஆளுநரின் சந்திப்புக்குப் பின்னர் கூறினார் ஸ்டாலின்.
அப்போது ஊழல் புகார்கள் குறித்தப் பட்டியல் விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இரண்டாக் கட்ட ஊழல் புகார் விவகாரமும் அதிமுகவிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துப் பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், ‘எங்கள் மடியில் கனமில்லை அதனால் எது குறித்தும் பயமில்லை. ஆகவே தான் நாங்கள் மக்களைத் தொடர்ந்து எந்த வித தயக்கங்களும் இன்றி சந்தித்து வருகிறோம். துரைமுருகன் இப்படியெல்லாம் மறைமுகமாக எங்கள் மீது குற்றம் சாட்டக் கூடாது.
நேருக்கு நேர் விவாதம் செய்ய அவர் முன் வர வேண்டும். நாங்கள் தொடர்ச்சியாக விவாதத்திற்குத் திமுகவினரை அழைத்துக் கொண்டு தான் இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
அதிமுக விருப்பமனு தேதி திடீர் மாற்றம்!


தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் கிட்டத்தட்ட ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்
கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், விருப்பமான பெறுதல், நேர்காணல், தேர்தல் பிரச்சாரம் செய்தல் ஆகியவற்றை கிட்டதட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதிமுகவில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுவை மார்ச் 5ஆம் தேதி வரை தரலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது போதிய அவகாசம் இல்லாததால் அந்த தேதி மார்ச் 3ஆம் தேதி என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
கூட்டணி முடிவாகும் முன்பே நேர்காணலை தொடங்கும் தேமுதிக: என்ன திட்டம்?


கூட்டணி முடிவாகும் முன்னே நேர்காணலை தொடங்க இருப்பதாக தேமுதிக அறிவித்துள்ளதால் என்ன திட்டம் வைத்திருக்கிறது அக்கட்சி என்ற ஆச்சரியம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக இன்று கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருந்தது. ஆனால் அதிமுக தரப்பில் இருந்து 12 தொகுதிகள் மட்டுமே தருவதாக கூறப்பட்டதால் பேச்சுவார்த்தைக்கு செல்லாமல் இருந்ததால் அந்தப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் நாளை பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை முடிவு செய்யும் முன்பே தற்போது நேர்காணலை தொடங்க இருப்பதாக தேமுதிக அறிவித்துள்ளது. சமீபத்தில் தேமுதிக விருப்ப மனுக்கள் பெற்ற நிலையில் மார்ச் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என அறிவிப்பு செய்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடுகிறதா? அல்லது வேறு கூட்டணிக்கு செல்கிறதா? என்ன திட்டம் என்பது புரியாமல் அரசியல் கட்சி தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழ்நாடு
சென்னையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட துணை ஜனாதிபதி!


கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனை அடுத்து அவர் தகுதி உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் எந்தவித பயமும் தேவையில்லை என்றும் அவர் அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் பிரதமரை அடுத்து சற்று முன்னர் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் சென்னையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் துணை குடியரசுத்தலைவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பதும், இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடதக்கது.