தமிழ்நாடு
சசிகலா முதல் ஜெயலலிதா வரை… பரபர சூழலில் அதிமுக மா.செ கூட்டம்… என்ன பேசப்பட்டது?


சசிகலா விடுதலை, ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் என தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் பம்பரமாக சுற்றித் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி காய் நகர்த்தல்களும் திரை மறைவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மூன்றாவது அணி உருவாவதற்கும் இந்த முறை தேர்தலில் வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இப்படியான சூழலில் நேற்று எந்த வித சலனமுமின்றி தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்துள்ளது.
நேற்று சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுகவின் தலைமையகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் கூட்டத்துக்குத் தலைமை வகித்தனர்.
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாகவும் இருந்த சசிகலா, இன்னும் ஒரு சில நாட்களில் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வருகிறார். தற்போது அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 27 ஆம் தேதி அவர் விடுதலையாகி வெளியே வரும் போது அதிமுகவில் சலசலப்பு இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதையொட்டி, சசிகலாவின் விடுதலையையொட்டி கட்சியில் எந்த வித சச்சரவுகளும் இருக்கக் கூடாது என்பது நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்.
அதேபோல வரும் 27 ஆம் தேதி, சென்னை, மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்து, திறக்கப்பட உள்ளது. இந்த நினைவிட திறப்பானது மிக பிரம்மாண்டமாக நடத்தவும் ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான பணிகள் மற்றும் பிரச்சார வியூகங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் கலந்து ஆலோசித்துள்ளனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து, முக்கிய நிர்வாகிகள் மெரினா கடற்கரைக்குச் சென்றனர். அங்கு ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ்நாடு
234 தொகுதிகளின் வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் – நாம் தமிழர் கட்சியின் ‘பலே’ திட்டம்!


தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த முறை திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி இடையே ஆட்சியைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அமமுக உள்ளிட்ட கட்சிகளும் பல தொகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் எனத் தெரிகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்ய உள்ளது.
இது குறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தற்போது தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இரு பெரும் திராவிடக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் பணத்தை வாரியிறைத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்குகளை வேட்டையாடும் சதிச்செயலை அரங்கேற்ற அணியமாகி நிற்கின்றன. இவற்றிற்கு முற்றிலும் நேர்மாறாக, நற்கருத்துகளை மக்களிடையே விதைத்து, அதன்மூலம் மக்களை அரசியல்படுத்தி, அதனூடே வாக்குகளைப் பெற்றுச் சனநாயகத்தை நிலைநிறுத்த போராடிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சி, இச்சட்டமன்றத் தேர்தலிலும் வழமைபோல மக்களையும், மகத்தான தத்துவத்தையும் நம்பி, தனித்தே களமிறங்குகிறது. ஆணும் பெண்ணும் சமம் என்னும் பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டும் பொருட்டு சரிபாதி 117 தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கி வரலாற்றைப் புரட்டிப்போட காத்திருக்கிறது. எவ்விதப் பின்புலமும் இல்லாத எளிய மனிதர்களால் கட்டப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிற நாம் தமிழர் கட்சி எனும் மக்கள் பாதுகாப்புப் பெரும்படை, எவ்விதத் தத்துவத் தடம்பிறழ்வோ, கொள்கை சறுக்கலோ, அரசியல் சமரசமோ எதுவுமற்று நன்னெறியோடு நேர்மையான பாதையில் வீறுநடைபோட்டுக் கொண்டிருக்கிறது. மண்ணின் மீதும், மக்கள் மீதும் பற்றுறுதி கொண்டு தத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு அரசியற்படுத்தப்பட்ட ஒரு இளையோர் கூட்டம் எவ்வித எதிர்பார்ப்புமற்று மாற்று அரசியலுக்காய் நாளும் உழைத்துக் கொண்டிருக்கையில், அதற்குத்தோள்கொடுத்து உதவ வேண்டியதும், ஒரு நல்லரசியல் துளிர்விடத் துணைநிற்க வேண்டியதும் சனநாயகப் பற்றாளர்களின் தலையாயக் கடமையாகும்.
‘பாதையைத் தேடாதே; உருவாக்கு!’ எனும் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது உயரியக் கூற்றுக்கு, உயிரூட்டும் விதத்தில் உலகெங்கும் வேர்பரப்பி வாழுகிற மக்கள் இராணுவமான நாம் தமிழர் கட்சிக்கு மகத்தான ஆதரவினையும், வாக்குகளையும் வழங்கி, அதிகாரத்தில் ஏற்றி வைக்க வேண்டியது ஒவ்வொரு இனமானத் தமிழரின் தார்மீகக் கடமையாகிறது.
வருகிற மார்ச் 07 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 03 மணியளவில் சென்னை, இராயப்பேட்டை ஒ.எம்.சி.ஏ. திடலில் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்வித்து, நாம் தமிழர் கட்சியின் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை ஆவணமாக வெளியிடவிருக்கிறோம். அந்நிகழ்வில் பெருந்திரளெனக் கூடி, நமது வெற்றியை முரசறிவிக்க வேண்டுமென இனமானத் தமிழர்களை அழைக்கிறோம். தமிழர்களுக்கான அரசை அமைக்கப் பாடுபடும் இப்பெரும்பணியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என யாவருக்கும் அறைகூவல் விடுக்கிறோம்.
‘தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்’ எனும் புரட்சிப்பாவலர் பாரதிதாசன் முன்வைத்த முழக்கத்தை முன்வைத்துக் களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சியை அரியணையேற்ற பாடுபடுவோம்!
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
தமிழ்நாடு
திமுக அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும்: ஒப்பந்தம் கையெழுத்தன பின் கூறிய மமக தலைவர்


பாஜகவின் சதியை முறியடிக்க திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று திமுக கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்து செய்தபின் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது
மேலும் மனித நேய மக்கள் கட்சி எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு
திமுக கூட்டணியில் முஸ்லீம் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? ஒப்பந்தம் கையெழுத்து!


தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
இந்தநிலையில் சற்றுமுன் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் கையெழுத்திட்டனர்
வைகோவின் மதிமுக கட்சிக்கு அதிகபட்சம் 5 அல்லது 7 தொகுதிகள் மட்டுமே தருவதாக திமுக தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்து வருகிறது.