இந்தியா
தெரு கடை வியாபாரிகளுக்கு சிறு கடன் பெற புதிய செயலி; மத்திய அரசு அதிரடி!


தெரு கடை வைத்திருப்பவர்கள் கடன் பெற PM சிவநிதி (http://pmsvanidhi.mohua.gov.in/) என்ற புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
கொரோனாவால் தெரு கடைகளின் வியாபாரம் செய்தவர்களின் பொருளாதாரம் சரிந்தது. எனவே தெரு கடைகளின் வியாபாரத்தைச் சீர் செய்து, மீண்டும் தொழில் தொடங்க குறைந்த வட்டியில் 10 ஆயிரம் ரூபாய் வரை சிறு கடன் அளிப்பதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது.
அதன் பெயரில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள PM SVANidhi செயலியைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து ஒரு வருட தவணையில் 10 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற முடியும்.
இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற்று, அதன் தவணையைச் சரியான நேரத்தில் திருப்பி செலுத்தி வந்தால் 7 சதவீதம் வரை வட்டி மானியமாக வங்கி கணக்கில் திரும்ப அளிக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல், இந்த தெரு கடை வியாபாரிகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் வியாபாரம் செய்யும் போது மாதம் 100 ரூபாய் ஊக்கத்தொகையும் மத்திய அரசு வழங்குகிறது.
ஜூன் 1-ம் தேதி முதல் PM SVANidhi செயலி பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி பல தெரு கடை வியாபாரிகளுக்குத் தெரியாது என்பதால், இந்த செய்தியை அவர்களுடன் பகிர்வதன் மூலம், அதிக வட்டிக்கு கடன் வாங்காமல் அவர்கள் பயன்பெறுவார்கள்.
இந்தியா
பாரம்பரிய கர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம்… சூளுரைக்கும் உத்தவ் தாக்கரே!


கர்நாடகாவில் மராட்டி பேசும் மக்கள் நிறைந்து காணப்படும் பாரம்பரிய பகுதிகளை விரைவில் மஹாராஷ்டிராவுடன் இணைப்போம் என மஹாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா- கர்நாடகா எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் மராட்டி மொழி பேசும் மக்கள் அதிக ஆண்டுகளாகவே வாழ்ந்து வருகிறார்கள். பாரம்பரியம் மிகுந்த இப்பகுதியை மஹாராஷ்டிரா உடன் இணைக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக மராட்டி சங்க அமைப்புகள் பல போராடி வருகின்றனர். கர்நாடகா- மஹாராஷ்டிரா இடையே இந்த விவகாரம் பெரும் மொழி எல்லைக் கலவரத்தையே ஏற்படுத்தி உள்ளதாம்.
இது போன்று மொழி சார்ந்த எல்லை கலவரத்தில் மரணம் அடைந்தவர்களுக்காக மஹாராஷ்டிராவில் ஆண்டுதோறும் ஜனவரி 17-ம் தேதி தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பேசுகையில், “மஹாராஷ்டிரா எல்லைக்கு அருகில் உள்ள பாரம்பரிய கர்நாடகா பகுதிகளை எங்கள் மாநிலத்துடன் இணைக்கும் வரையில் ஓயமாட்டோம். மாநில எல்லைப் பிரச்னையில் உயிர்த் தியாகம் செய்த அத்தனை தியாகிகளுக்குமான நன்றிக்கடனாக இந்தக் காரியத்தை நிச்சயம் செய்து முடிப்பேன்” என சூளுரை எடுத்துள்ளார்.
இந்தியா
சீரியஸாகும் நாராயணசாமி… சீன் போடும் கிரன் பேடி- புதுச்சேரியில் தொடரும் அதிகார மோதல்


புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும் ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையேயான அதிகார மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
புதுச்சேரிக்கு முதல்வராக நாராயணசாமியும் ஆளுநராக கிரண் பேடியும் பொறுப்பேற்று 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும், இவர்களுக்கு இடையேயான மோதல் முடிந்தபாடில்லை. மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றத் தடையாக இருப்பதாக கிரண் பேடி மீது புகார்ப்பத்திரம் வாசிக்கிறார் முதல்வர் நாராயணசாமி. இதற்காக பொங்கலுக்கு முன்னர் தர்ணா போராட்டத்தில் தன் அமைச்சர்களுடன் சாலையில் அமர்ந்துவிட்டார்.
ஆனால், கிரண் பேடி எதற்கும் அசர்வதாகத் தெரியவில்லை. அமைச்சர்கள் கடிதம் அனுப்பினால் பதில் மட்டும் வருகிறதாம். ஆனால், எந்தவொரு திட்டத்துக்கும் அனுமதி தராமல் இழுத்தடித்து வருகிறாராம் கிரண் பேடி. அமைச்சர் கந்தசாமி என்பவர் தற்போது சட்டப்பேரவையிலேயே குளித்துத் தூங்கி சாப்பிட்டு அங்கேயே போராட்டத்திலும் அமர்ந்து வருகிறார்.
ஆளுநர் கிரண்பேடி இதுவரையில் அரசின் சார்பில் முதல்வர், அமைச்சர்கள் என யாரையும் நேரிலேயே சந்திக்க முன் வரவில்லை என்றும் நாராயணசாமியும் அமைச்சர்களும் புகார் தெரிவிக்கின்றனர். தள்ளி அடித்து கிரண் பேடியைச் சந்திக்க சென்ற அமைச்சர்களை காவல் துறையினர் விட மறுப்பதால் தொடர்ந்து சாலையிலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர். அதிகப்பட்சமாக அமைச்சர் கந்தசாமி கடந்த 10 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், கிரண் பேடி தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் கொடுக்கப்படவில்லை. இதற்காகவும் தனி கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இந்தியா
குடிபோதையில் 11 வயது மகனை கொளுத்திய தந்தை! உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதி!!


ஹைதராபாத்தில் குடிபோதையில் பெற்ற மகனையே கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள குஹட்பல்லியைச் சேர்ந்த பாலு என்பவர் கடந்த ஞாயிறன்று வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது 11 வயது மகன் சரண் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தான். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் ஆன்லைன் வகுப்புகள் மட்டும் அவனுக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில், சரண் சரியாக படிக்கவில்லை என்று கூறி பெற்ற மகன் என்றும் பாராமல் அடித்து உதைத்துள்ளார். பின்பு பீடியும் தீப்பெட்டியும் வாங்கி வரச் சொல்லியுள்ளார். சரணும் பயத்துடன் தந்தை கேட்டதை வாங்கிக் கொடுத்துள்ளான்.
அதன்பிறகும் ஆத்திரம் குறையாமல், குடிபோதையில் மகன் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். சரணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சரணை மீட்டு 60 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பாலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.