இந்தியா
மோடி அரசுக்கு சம்மட்டி அடி: குடியரசு தினத்தன்று டெல்லியில் 100 கிலோ மீட்டர் ‘டிராக்டர் பேரணி’… விவசாயிகள் உறுதி!


மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்னர், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பெருந்திரளான விவசாயிகள் டெல்லியில், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த 60 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வரும் குடியரசு தினமான 26 ஆம் தேதியன்று, டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தி மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்க உள்ளது உறுதி என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மிகப் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
புதிய வேளாண் சட்டங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது மட்டும்தான் போராடும் விவசாயிகளின் ஒரேயொரு கோரிக்கையாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் மத்திய அரசு, ‘தேவையென்றால் கொண்டு வந்துள்ள விவசாயச் சட்டங்களில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம். ஆனால், சட்டத்தைத் திரும்பப் பெற முடியாது’ என்று விடாப்படியாக இருக்கிறது. இதுவரை விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் 12 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. ஆனால், எந்தப் பேச்சுவார்த்தையிலும் இரு தரப்புக்கும் இடையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதனால், தங்களது போராட்டங்களைத் தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக மத்திய அரசு, கடைசி சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது, ‘வேளாண் சட்டங்களை அமல் செய்வதறை ஒன்றரை ஆண்டுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். போராட்டங்களை கைவிடுங்கள்’ என்றது. ஆனால், ‘நாங்கள் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்யச் சொல்கிறோம். தற்காலிக அல்லது இடைக்காலத் தடை எந்த வித நன்மையும் பயக்காது’ என்று நிலைப்பாட்டைத் தெரிவித்து விட்டனர்.
அந்த வகையில், நாட்டின் குடியரசு தினமான வரும் 26 ஆம் தேதி, லட்சக்கணக்கான டிராக்டர்கள் கொண்டு டெல்லியில் பேரணி சென்று மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க விவசாயிகள் ஆயத்தம் ஆகி வருகின்றனர். இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறது. குறிப்பாக உச்ச நீதிமன்றத்தில் இந்தப் போராட்டத்துக்கு எதிராக வாதாடிய மத்திய அரசு, ‘இப்படியான பேரணி நம் நாட்டின் குடியரசு தினத்தன்று நடந்தால் அது நாட்டிற்கே மிகப் பெரிய அவமானமாக முடியும்’ என்றது. ஆனால் உச்ச நீதிமன்றம், ‘விவசாயிகளைப் போராடக் கூடாது என்று சொல்லும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அவர்கள் போராட்டத்தை எங்களால் தடுக்க முடியாது’ என்று கூறிவிட்டது.
இப்படியான சூழலில் டெல்லி மாநில போலீஸ், விவசாயிகளின் இந்த மிகப் பெரும் டிராக்டர் பேரணிக்கு அனுமதி கொடுக்கவில்லை என்று சொல்கிறது. அதே நேரத்தில் விவசாயிகள் தரப்பு, ‘பேரணி எப்படியும் நடந்தே தீரும். காவல் துறை எங்களுக்கு கூடிய விரைவில் அனுமதி கொடுக்கும்’ என்கிறது. இந்தப் பேரணி நடந்தால், அசம்பாவித சம்பங்கள் நிகழலாம் என்று அரசுத் தரப்பு எச்சரிக்கை விடுத்தும் விவசாயிகள், ‘நாங்கள் அற வழியில் மட்டும் தான் போராட்டத்தை அரங்கேற்றுவோம். எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாது’ என்று உறுதி அளித்திருக்கிறார்கள். அடுத்து வரும் நாட்களில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கைகளை முடுக்கிவிடும் என்று தெரிகிறது.
இந்தியா
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா: மத்திய சுகாதாரத்துறை தகவல்


தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சற்றுமுன் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகரித்துள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக இந்த மாநிலங்களில் 15 ஆயிரத்து 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இன்று முதல் 60 வயது முதியவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு ஆரம்பித்துள்ள நிலையில் தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதாக எண்ணி மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்றும் மாஸ்க் மற்றும் தனிமனித இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் பிரதமர் மோடி நர்ஸிடம் சொன்ன விஷயம் என்ன தெரியுமா?



பிரதமர் நரேந்திர மோடி, இன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இது குறித்தான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஊசி போட்டுக் கொண்ட பின்னர் பிரதமர் மோடி, தனக்கு தடுப்பூசி செலுத்திய நர்ஸிடம் என்ன பேசினார் என்பது குறித்தான தகவல் தற்போது கவனம் ஈர்த்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில், கோவாக்ஸின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் ‘கோவாக்ஸின்’ தடுப்பூசி இன்னும் மூன்றாம் கட்ட பரிசோதனையை நிறைவுசெய்யாத நிலையில் உள்ளதால், அந்தத் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த ஐயம் மருத்துவர்களாலும், அறிவியல் அறிஞர்களாலும் எழுப்பப்படுகின்றன.
முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு, இலவசமாக செலுத்தி வருகின்றது. இந்நிலையில் கூடிய விரைவில் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு வரும் என்று தகவல் வந்துள்ளது. அப்படி விற்பனைக்கு வரும் தடுப்பூசியை எவ்வளவு ரூபாய்க்குள் விற்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு உத்தரவு போட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி, 250 ரூபாய்க்குள்ளாகவே கொரோனா தடுப்பூசி விற்கப்பட வேண்டும். அதே நேரத்தில் நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Took my first dose of the COVID-19 vaccine at AIIMS.
Remarkable how our doctors and scientists have worked in quick time to strengthen the global fight against COVID-19.
I appeal to all those who are eligible to take the vaccine. Together, let us make India COVID-19 free! pic.twitter.com/5z5cvAoMrv
— Narendra Modi (@narendramodi) March 1, 2021
இன்று முதல் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதைத் தாண்டி நோயுற்று இருப்பவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முடுக்கிவிடுகிறது மத்திய அரசு. இப்படியான சூழலில் தான், கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள விருப்பப்படும் மக்கள், தாங்கள் விரும்பும் தனியார் மருத்துவமனைகளை தேர்வு செய்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அரசு வழிகாட்டியுள்ளது. இதுவரை அரசு மருத்துவமனைகளைத் தவிர, நாட்டில் உள்ள 10,000 தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல், நாட்டில் உள்ள 1.15 கோடி முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நாட்டில் உள்ள 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசியைப் போட இலக்கு வைத்துள்ளது இந்திய அரசு. ஆனால், கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின் முதற்கட்டத்திலேயே பல முன்களப் பணியாளர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக முறையான சோதனைகளை நிறைவு செய்யாத பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள சுகாதார ஊழியர்களே பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் வெறும் 11 சதவீதம் பேரே கோவாக்ஸின் மருந்துக்கு ஆர்வம் காட்டியுள்ளனர்.
மக்கள் மனதில் இருக்கும் ஐயத்தைப் போக்கும் வகையில் இன்று டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் மோடி. அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் நர்ஸான நிவேதா என்பவர் தடுப்பூசி செலுத்தினார்.
அவர், ‘பிரதமர் இன்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வருகிறார் என்கிற விஷயம் கடைசி நேரத்தில் தான் எங்களுக்குச் சொல்லப்பட்டது. தடுப்பூசி போட்டு முடித்தப் பின்னர், ‘முடிச்சாச்சா? எனக்கு எதுவுமே தெரியல’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார் பிரதமர்.
தடுப்பூசி போடும் நேரத்தில் நாங்கள் எல்லாம் எங்கிருந்து வந்து பணி செய்கிறோம் என்று கேற்று பேசிக் கொண்டிருந்தார். அவர் அப்படிப் பேசியது நன்றாக இருந்தது’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா
கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார் பிரதமர் மோடி: வைரல் புகைப்படம்



இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு தடுப்பூசி பொதுமக்களுக்கு போட்டு வரும் நிலையில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது
இந்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல் டோஸை பிரதமர் மோடி செலுத்திக் கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது