சினிமா செய்திகள்
‘மாஸ்டர்’ வசூலை மிஞ்சியதா ‘சுல்தான்’..? 5 நாட்களில் சாதனை!


கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் வெளியான சுல்தான், பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்துள்ளது. மசாலா கலந்த கமர்ஷியல் படம் என்பதால் பெரும் அளவிலான ரசிகர்கள் கூட்டம் திரையரங்கை நிரப்பி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ரிலீஸான தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வசூலை ‘சுல்தான்’ மிஞ்சியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
கார்த்தி கடைசியாக கைதி படத்தில் நாயகன் ஆக நடித்து பெரும் பாராட்டைப் பெற்றிருந்தார். அதன் பின்னர் நடித்த சுல்தான் படம் கொரோனா கட்டுப்பாடுகளால் தாமதம் ஆகிக் கொண்டே இருந்தது. படத்தை ஓடிடி-யில் வெளியிடுவதாக முதலில் அறிவித்த தயாரிப்பு நிறுவனம் பின்னர் தியேட்டர் ரிலீசுக்குப் படத்தைத் தயார் செய்தது.
சுல்தான் படத்தில் கார்த்தி-க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம் மொழித் திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ராஷ்மிகா பரிச்சயம் ஆனவர் தான் என்றாலும் சுல்தான் படம் மூலமாகத் தான் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆகியுள்ளார் ராஷ்மிகா. இந்தப் படத்தை சிவகார்த்தியேனின் ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கி உள்ளார்.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சுல்தான் திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் சுல்தான் படத்தின் வெற்றி விழாவில் பேசிய தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ‘சுல்தான் திரைப்படம் இதுவரை 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. அதில் தமிழகத்தில் 19 கோடி ரூபாயும், ஆந்திராவில் 5 கோடியும் அதிகபட்சமாக வசூல் செய்துள்ளது’ எனத் தெரிவித்தார். இது மாஸ்டர் படத்திற்கு இணையான வசூல் என்று கோலிவுட் தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.
சினிமா செய்திகள்
#Vijay65 – வெளியான மாஸ் அப்டேட்!


தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படாத காரணத்தால் ‘விஜய் 65’ என்று அழைத்து வருகிறார்கள். ‘கோலமாவு கோகிலா’ மூலம் தமிழ்த் திரைக்கு இயக்குநராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார், ‘விஜய் 65’ படத்தை இயக்குகிறார். அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்கி முடித்துள்ள ‘டாக்டர்’ படம் இன்னும் ரிலீஸ் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில வாரங்களில் டாக்டர் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ள இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு ரூபாய் 3 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவருக்கு அங்கேயே ஒன்றரை கோடி முதல் இரண்டு கோடி ரூபாய் வரை மட்டுமே சம்பளம் தரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழில் மார்க்கெட்டே இல்லாத பூஜாவிற்கு ரூபாய் மூன்று கோடி சம்பளமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த ஆண்டு வரை பூஜாவின் கால்சீட் நிரம்பி இருந்ததாகவும், அவற்றை மாற்றி அமைப்பதற்காக அதிக தொகையை பூஜா கேட்டதாகவும் அதற்கு தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜார்ஜியா நாட்டில் விஜய்65 படத்தின் படப்பிடிப்புத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்த மாத இறுதியில் பூஜா, படக்குழுவினருடன் கலந்து கொள்கிறாராம்.
சினிமா செய்திகள்
பார்த்திபன் – ஏ.ஆர்.ரகுமான் இணைந்த புதிய படம்!


தமிழ் சினிமாவில் புதுப் புது முயற்சிகளை செய்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைத் தக்க வைத்திருப்பவர் இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன்.
அவர் கடைசியாக ‘ஒத்த செருப்பு’ என்னும் படத்தை இயக்கி நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவர் மட்டும் தான் நடித்திருப்பார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் அடுத்ததாக, ‘இரவின் நிழல்’ என்னும் படத்தை எடுக்கிறார் பார்த்திபன். இந்தப் படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து முடிக்கப் பார்த்திபன் முயன்றுள்ளார்.
இந்நிலையில் இப்போது இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளதை ஏ ஆர் ரகுமான் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தெரிவித்துள்ளார். இதைக் குறிப்பிட்டு டிவீட் செய்த பார்த்திபன் இரவின் மடியில் படத்தில் 3 பாடல்கள் முடிந்துள்ளதாகவும், இன்னும் ஒரு ப்ரோமோஷன் பாடலுக்கு இசையமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை ரகுமானும் பார்த்திபனும் இணைந்து ஒரு திரைப்படத்தில் வேலை செய்ததே இல்லை. இதுவரை முதல் முறை ஆகும். இதனால் ரசிகர்கள் மத்தியில் ‘இரவின் நிழல்’ குறித்தான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
சினிமா செய்திகள்
த்ரிஷாவுக்குத் தடை விதிக்க நடவடிக்கை..!- வெளிவந்த பகீர் பின்னணி


என்றும் இளமை துள்ளலுடன் தென்னிந்திய திரையுலகில் வலம் வரும் நடிகையாக இருப்பவர் த்ரிஷா. பல ஆண்டுகளாக கதாநாயகியாக த்ரிஷா நடித்து வந்தாலும், அவருக்கு வயதான தோற்றமே வரவில்லை. இதன் காரணமாக இன்றும் இளம் ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடித்து வருகிறார் த்ரிஷா. சமீபத்தில் கூட விஜய் சேதுபதியுடன் ’96’ படத்தில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.
இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பரமபதம் விளையாட்டு’ படத்தால் த்ரிஷாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தை சென்ற ஆண்டே வெளியிட படக்குழு முடிவு செய்து பணிகளைச் செய்து வந்துள்ளது.
ஆனால், இந்தப் படம் குறித்தான ப்ரொமோ நிகழ்ச்சியில் த்ரிஷா கலந்து கொள்ளவில்லை. இதனால் அவருக்கும் படத்தைத் தயாரித்த 24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.
இப்படியான சூழலில் பரமபதம் விளையாட்டு படத்தை நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து படத்தைப் ப்ரொமோட் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கும் த்ரிஷா, ஒத்துழைப்பு நல்காத காரணத்தால், அவரின் படங்களுக்குத் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாம்.
-
தமிழ்நாடு18 hours ago
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கா? பெரும் பரபரப்பு
-
விமர்சனம்2 days ago
அழகான, அதிர்ச்சியான அனுபவத்தைப் பெறக் காத்திருங்கள்… கர்ணன் விமர்சனம்!
-
இந்தியா2 days ago
முழு லாக்டவுன் அச்சம்: மாநிலத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
-
வேலைவாய்ப்பு2 days ago
வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!